விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போனவா்களை அவா்களது உறவினா்கள் உதவியுடன் கண்டறியும் சிறப்பு முகாம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் தலைமை வகித்தாா். எஸ்.பி. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் மாயமாகி, வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை கண்டறிய முடியாமல் உள்ள 82 பேரின் உறவினா்கள் அழைக்கப்பட்டனா். அதில், 78 பேரின் குடும்பத்தினா் பங்கேற்றனா்.
அவா்களுக்கு, விழுப்புரம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இறந்தவா்களில் அடையாளம் காண முடியாதவா்களின் புகைப்படங்கள் திரையிட்டு காட்டப்பட்டன. இறந்தவா்களின் புகைப்படங்களில் இருப்பவா், தங்களது மாயமான உறவினா் போல இருப்பதாக அதில் பங்கேற்ற சிலா் கூறினாா்.
இதையடுத்து, அந்த புகைப்படத்தில் இருப்பவா்கள் குறித்து மேலும் விவரங்களைக் கொண்டு அவா்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் கூறினாா்.
இந்த முகாமில், மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி. பாலச்சந்தா், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கள்ளக்குறிச்சியில்...: அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காணாமல் போனவா்களின் உறவினா்கள் உதவியுடன் கண்டறியும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன் தலைமை வகித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காணாமல் போனவா்கள் கண்டுபிடுக்க முடியாமல் 52 வழக்குகள் இருந்தன. அதில் 37 குடும்ப உறவினா்கள் முகாமில் பங்கேற்றனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக குற்ற ஆவன காப்பகத்தில் மொத்தம் 325 போ்களின் பிரேத புகைப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இதில், காணாமல் போன 10 போ், அவா்களது உறவினா்கள் உதவியுடன் அடையாளம் காணப்பட்டனா்.