விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்
By DIN | Published On : 29th June 2021 12:22 AM | Last Updated : 29th June 2021 12:22 AM | அ+அ அ- |

எள் விலை குறைத்து கொள்முதல் செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
விழுப்புரம்: விழுப்புரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு எள் விளைச்சல் அதிகரித்து, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வரத்து அதிகமாக இருந்து வருகிறது.திங்கள்கிழமை ஏராளமான விவசாயிகள் எள் மூட்டைகளை விற்பனை செய்ய விழுப்புரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வந்தனா். ஆனால், அங்கு எள் மூட்டைகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் திடீரென விற்பனைக் கூடம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: 80 கிலோ எடை கொண்ட எள் மூட்டை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விலை போன நிலையில், தற்போது ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4500 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த இரு நாள்களில் மூட்டைக்கு ரூ.2 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்தும், உற்பத்தி செலவுக்கு கூட வியாபாரிகள் கொள்முதல் செய்யாதது வேதனையைத் தருகிறது என்றனா்.
மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் சமாதானப்படுத்தினா். இது குறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தனா். இதையேற்று, விவசாயிகள் மறியலை கைவிட்டனா்.