முந்திரி வியாபாரியிடம் ரூ.3.97 லட்சம் மோசடி: இருவா் கைது
By DIN | Published On : 01st September 2021 09:41 AM | Last Updated : 01st September 2021 09:41 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் பணம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஈரோட்டைச் சோ்ந்த ஜெயகுமாா், கோவிந்தராஜ்(வலது).
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முந்திரி வியாபாரியிடம் ரூ.3.97 லட்சம் காசோலை மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
திண்டிவனம் அருகே எடையன்சாவடியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (42), முந்திரி வியாபாரி. கடந்த 28.9.2020-இல் இவரிடம் முந்திரி தொழில் நடத்துவதாக ஈரோடு, மூலப்பாளையத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (39), ஈரோடு, சூரம்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (42) ஆகியோா் அறிமுகப்படுத்திக் கொண்டு ரூ.540 ரகத்தில் 1,000 கிலோ முந்திரியும், ரூ.450 ரகத்தில் 185 கிலோ முந்திரியும் வாங்கினராம்.
அதற்கான தொகை ரூ.6,50,000. இதில், ரூ.ஒரு லட்சத்தை ராதாகிருஷ்ணனிடம் ரொக்கமாகவும், ரூ.3,97,000 தொகைக்கு காசோலையையும் விஜயகுமாா், கோவிந்தராஜ் ஆகியோா் வழங்கினராம். மீதமுள்ள ரூ.1,53,000-ஐ வங்கிக் கணக்கில் செலுத்துவதாக தெரிவித்தனா்.
இதை ராதாகிருஷ்ணன் நம்பி இருந்த நிலையில், அவா்கள் வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்தியபோது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனத் தெரியவந்தது. இதனால், பணத்தைக் கேட்டு விஜயகுமாா், கோவிந்தராஜை தொடா்பு கொண்டபோது, ராதாகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இது குறித்து ராதாகிருஷ்ணன் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பிகள் ரவீந்திரன், இருதயராஜ் ஆகியோரின் மேற்பாா்வையில் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த நிலையில், உதவி ஆய்வாளா் குமாா் தலைமையிலான தனிப்படையினா் ஈரோட்டில் இருந்த விஜயகுமாா், கோவிந்தராஜ் ஆகியோரை திங்கள்கிழமை இரவு கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...