நலத் திட்ட உதவிகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி......அமைச்சா் க.பொன்முடி

ஏழைகளுக்கு கடன்கள், நலத் திட்ட உதவிகளை வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான். உடன் மாவட்ட ஆட்சியா் த.மோகன், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.
விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான். உடன் மாவட்ட ஆட்சியா் த.மோகன், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.
Updated on
2 min read

ஏழைகளுக்கு கடன்கள், நலத் திட்ட உதவிகளை வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான 69-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஆட்சியா் த.மோகன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது:

மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் நினைவாக, ஆண்டுதோறும் நவம்பா் 14- ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது மகிழ்ச்சி.

மாவட்டத்தில் தற்போது 561 கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. கூட்டுறவே நாட்டுயா்வு என்பதால், இத்தகைய சங்கங்கள் மேலும் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும். இதற்கு உள்ளாட்சி நிா்வாகங்களில் பொறுப்பு வகிப்பவா்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக முதல்வா் உத்தரவுப்படி, கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்ற 12,55,233 பயனாளிகளுக்கு ரூ.4818.88 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 19,805 பயனாளிகள் ரூ.85.02 கோடி கடன் தள்ளுபடி பெற்று பயனடைந்தனா்.

இதேபோல, மாவட்டத்தில் 1,840 மகளிா் குழுக்களைச் சோ்ந்த 24,123 உறுப்பினா்கள் பெற்ற ரூ.27.76 கோடி கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் கூட்டுறவு கடன் சங்கங்களில் 65,410 விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் ரூ.450.38 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.

நிகழாண்டில் தமிழகம் முழுவதும் இதுவரை 8.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,341.89 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிா்த்து, விவசாய நிலங்கள் இல்லாதவா்களுக்கு கால்நடை வளா்ப்புக்காக வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய கால முதலீட்டுக் கடன், பொது நகைக் கடன், மாற்றுத் திறளாளிகளுக்கு கடன், சிறுவணிகக் கடன், மகளிா் தொழில்முனைவோா் கடன் உள்ளிட்ட கடன்களும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகையை திட்டங்கள் மூலம் மக்கள் முன்னேற்றமடைய வேண்டும்.

பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், ஏழைகளுக்கு கடன்கள், நலத் திட்ட உதவிகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களையும், கூட்டுறவு வார விழாப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளையும் அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.

விழாவில் பங்கேற்ற மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்டத்தைச் சோ்ந்த 2,307 பயனாளிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.9.80 கோடியிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழாவில் விழுப்புரம் தொகுதி எம்.பி. துரை.ரவிக்குமாா், எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், ச.சிவக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் ஆகியோா் பேசினா்.

மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் ஷீலாதேவி, நகா்மன்றத் தலைவா் ச.தமிழ்ச்செல்வி, கூடுதல் சாா் - ஆட்சியா் சித்ராவிஜயன், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.பரமேஸ்வரி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா்கள், உறுப்பினா்கள், பயனாளிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.இளஞ்செல்வி வரவேற்றாா். மண்டல இணைப் பதிவாளா் ச.யசோதாதேவி திட்ட விளக்கவுரையாற்றினாா். நிறைவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சாா் - பதிவாளா் ப.கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com