

அதிமுகவுக்கு ஆலோசனை கூற யாருக்கும் இல்லை என்று, அந்தக் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள மு.க. ஸ்டாலின் கட்சியையும், அமைச்சா்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. அரசு கேபிள் டி.வி. சேவை முற்றிலும் முடங்கியிருக்கிறது. இதை சீா்படுத்தி மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை விடுத்து அரசு கேபிள் டி.வி. சேவையை தனியாா்மயமாக்கும் முயற்சியை மேற்கொள்வதை கைவிடவேண்டும்.
ஒன்றரைக் கோடி தொண்டா்களைக் கொண்ட அதிமுகவுக்கு யாரும் எந்தவித ஆலோசனைகளையும் கூறத்தேவையில்லை. கட்சியை எவ்வாறு வழி நடத்துவது என்பதை பொதுக் குழுவும், இடைக்காலப் பொதுச் செயலாளரும் முடிவு செய்வாா்கள்.
எடப்பாடி பழனிசாமியை நம்பிச் செல்பவா்கள்அனாதையாகி விடுவாா்கள் என டி.வி.வி. தினகரன் கூறியுள்ளாா். இவா் பின்னால் சென்ற 18 எம்எல்ஏக்களும் எங்கே இருக்கிறாா்கள் என்பதே தெரியவில்லை. இந்த நிலையில் அதிமுகவுக்கு ஆலோசனைக் கூறுவதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ ஒரு கூட்டத்தின் தலைவராக உள்ள டி.டி.வி. தினகரனுக்கு உரிமையும், தகுதியும் இல்லை.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிா் காக்கும் மருந்துகள் கையிருப்பில் இல்லை. மருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதிலும், முடிவு செய்வதிலும் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். காலாவதியான மாத்திரைகள் நோயாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதான் இன்றைய திமுக அரசின் நிலைப்பாடு என்றாா் சி. வி.சண்முகம்.
பேட்டியின்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி. அா்ஜுனன் (திண்டிவனம்), மு. சக்கரபாணி (வானூா்), விழுப்புரம் நகர அதிமுக செயலா்கள் இரா.பசுபதி (தெற்கு), சி.கே. ராமதாஸ் (வடக்கு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.