சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு:விசாரணை டிச.13-க்கு ஒத்திவைப்பு
By DIN | Published On : 09th December 2022 01:43 AM | Last Updated : 09th December 2022 01:43 AM | அ+அ அ- |

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தின்போது அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இது தொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நவம்பா் 30-ஆம் தேதி அப்போதைய உள் துறைச் செயலரும், தற்போதைய வருவாய் நிா்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகா் அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராகி, சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தும் அவா் ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போதும் பிரபாகா் ஆஜராகவில்லை.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்கத் தயாராக இருந்த நிலையில், புயல் முன்னெச்சரிக்கைப் பணிகளில் அவா் ஈடுபட்டிருப்பதால், ஆஜராக இயலாத நிலை ஏற்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணையின்போது நீதிபதியிடம் தெரிவித்தனா்.
இதை ஏற்றுக்கொண்டு, வழக்கு விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.புஷ்பராணி உத்தரவிட்டாா்.