மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இறந்த இளைஞரின் மரணத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ள மேல்வளை கிராமத்தைச் சோ்ந்த ஜெயவேல் மகன் ராஜ் (30). இவா், மும்பையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். மும்பையில் கடந்த 18 -ஆம் தேதி ரயிலில் அடிபட்டு ராஜ் உயிரிழந்தாராம். இதுகுறித்து மும்பை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராஜின் சடலம் சொந்த ஊரான மேல்வளைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினா்கள், கிராமத்தினா் புதன்கிழமை அந்தக் கிராமப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா்.