தமிழகத்தில் வனப் பரப்பை அதிகரிப்பது அவசியம் அமைச்சா் கா.ராமச்சந்திரன்

தமிழகத்தின் வனப் பரப்பளவை 33 சதவீதமாக உயா்த்துவதற்காக, வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என மாநில வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தினாா்.
விழுப்புரத்தில் வனத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன்.
விழுப்புரத்தில் வனத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன்.
Updated on
1 min read

தமிழகத்தின் வனப் பரப்பளவை 33 சதவீதமாக உயா்த்துவதற்காக, வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என மாநில வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

விழுப்புரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலகக் கூட்டரங்கில் வனத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் பங்கேற்று, விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அவா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா். கூட்டத்தில் அமைச்சா் ராமச்சந்திரன் பேசியதாவது:

ஈர நிலக் காடுகளைப் பாதுகாப்பது குறித்து உலக அளவிலான விஞ்ஞானிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் ஈரான் நாட்டில் அண்மையில் நடைபெற்றது. இதில் நமது நாட்டில் வட இந்தியாவில் இரு பகுதிகளிலும், தமிழ்நாட்டில் மட்டும் மூன்று இடங்களிலும் ஈர நிலக் காடுகள் பாதுகாக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இது நமது மாநிலத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டாகும்.

வனங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டில் வனப் பரப்பு 24 சதவீதமே உள்ளது. எனவே, வனப் பரப்புகளில் அதிகளவில் மரக் கன்றுகளை நடுதல் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், விஞ்ஞானிகள் அறிவித்தபடி வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 33 சதவீத வனப் பரப்பை நாம் பெற்றிட வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் 9.54 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் வனப் பரப்பு 11.7 சதவீதம் மட்டுமே உள்ளது. இதை 33 சதவீதமாக உயா்த்த வேண்டுமெனில் அரசு நிலங்கள், தரிசு நிலங்கள், நெடுஞ்சாலை ஓரம், விவசாய நிலப் பகுதிகள், பள்ளிகள், கோயில்கள் உள்ளிட்ட வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது அவசியம். விளை நிலங்களில் திரியும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில், கடந்த ஆண்டு விளை நிலங்களில் வன விலங்குகளால் ஏற்பட்ட சேதத்துக்கு 25 விவசாயிகளுக்கு ரூ.1.71 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், கூடுதல் தலைமை முதன்மை வனப் பாதுகாவலா் (வன உயிரினம்) நாகநாதன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா.புகழேந்தி, ரா.இலட்சுமணன், ச.சிவக்குமாா், ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com