பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், பெண் எஸ்.பி.யிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு நடத்தி வந்த குறுக்கு விசாரணை புதன்கிழமை நிறைவடைந்தது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவியதாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோா் நேரில் ஆஜராகினா். இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்குரைஞா்கள் 13-ஆவது நாளாக புதன்கிழமையும் குறுக்கு விசாரணை நடத்தினா். சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த குறுக்கு விசாரணை பிகற்பல் நிறைவடைந்தது.
இதையடுத்து, பெண் எஸ்.பி.யின் கணவரும், அரசுத் தரப்பு 2-ஆவது சாட்சியுமான மத்தியப் பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்தாா். இதற்கு, அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாா்.
மேலும், இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளான காவல் துறை ஐஜி ரூபேஷ்குமாா், எஸ்.பி. மகேஸ்வரன், காவல் ஆய்வாளா் பிதுன்குமாா் ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாா். இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.