செஞ்சி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குபாடபுத்தகங்கள்: அமைச்சா் வழங்கினாா்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடபுத்தகங்களை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சிமஸ்தான் வியாழக்கிழமை வழங்கினாா்.
செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா தலைமை வகித்தாா். செஞ்சி கல்வி மாவட்ட அலுவலா் கலைவாணி முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் கணபதி வரவேற்றாா்.
இந்தப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், விலையில்லா பாடப்புத்தகங்களை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வழங்கியதுடன், 6-ஆம் வகுப்பில் புதிய மாணவா்கள் சோ்க்கையையும் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.
விழாவில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பள்ளி ஆய்வாளா் விநாயகமூா்த்தி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சி.மாணிக்கம், திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி நன்றி கூறினாா்.