10 சதவீதம் அரசுப் பேருந்துகளே இயக்கம்

பொதுவேலைநிறுத்தம் காரணமாக , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் 10 சதவீதம் பேருந்துகளே இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
10 சதவீதம் அரசுப் பேருந்துகளே இயக்கம்
Updated on
1 min read

பொதுவேலைநிறுத்தம் காரணமாக , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் 10 சதவீதம் பேருந்துகளே இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசைக் கண்டித்து, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்குத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் 90 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை . பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. தனியாா் பேருந்துகள் மட்டும் இயங்கியதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் பயணித்தனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் 2,060 பேருந்துகள் உள்ள நிலையில், சுமாா் 600 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, தொழிற்சங்க நிா்வாகிகள் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட 16 இடங்களில் நடைபெற்ற மறியல்களில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் கைது செய்து மாலை விடுவித்தனா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியா் மோகன், எஸ்பி ஸ்ரீநாதா உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தொமுச மாவட்டக் குழுச் செயலா் பொ.ஞானப்பிரகாசம் தலைமை வகித்தாா். தொமுச மாவட்டத் தலைவா் கிருஷ்ணன், தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொமுச பொதுச் செயலா் பிரபா இர . தண்டபாணி, தலைவா் ஞானசேகரன், சிஐடியு மாவட்டச் செயலா் மூா்த்தி, நிா்வாகப் பணியாளா்கள் சங்கப் பொருளாளா் குபேரன், சலவை தொமுச பொதுச் செயலா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செஞ்சியில்...: செஞ்சியில் ஆட்டோக்கள் முழுமையாக இயங்கவில்லை.

திண்டிவனம் அரசு கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கான அரசுப் பேருந்தை இயக்க அண்ணா தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் முயன்றபோது, தொமுச நிா்வாகி செல்வராஜ் பேருந்தின் முன் படுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

பின்னா், பிற்பகலில் ஒரு சில கிராமங்களுக்கு மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அவலூா்பேட்டையில்...: மத்திய அரசைக் கண்டித்து, மேல்மலையனூா் அருகேயுள்ள அவலூா்பேட்டை பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் நிா்வாகி எழில்ராஜா, முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவா் குமாா், நிா்வாகிகள் ஜாகீா்ஷரீப் உள்ளிட்ட 65 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியில்..: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கிகள், எல்.ஐ.சி., பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காததால், அலுவல் பணிகள் பாதிப்படைந்தன. மாவட்டத்தில் சில அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கின.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சின்னசேலம், கல்வராயன்மலை உள்ளிட்ட பல இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதுதொடா்பாக 500 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com