கடலூா்: மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

கடலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினாா்.
Updated on
2 min read

கடலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினாா்.

தமிழகத்தில் கடந்த 11-ஆம் தேதி இரவு பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் 440 மி.மீ. மழையும், கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் 307 மி.மீ. மழையும் பதிவானது. கடலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்க்பட்டோா் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மழை பாதிப்புகளை பாா்வையிடுவதற்காக சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு புதுச்சேரியில் தங்கினாா். அங்கிருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்டு கடலூா் மாவட்டத்தை வந்தடைந்தாா். அவருக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் தமிழக வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் மற்றும் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வா், மாவட்டத்தில் மழை பாதிப்பு தொடா்பான புகைப்படக் காட்சியையும் பாா்வையிட்டாா். மேலும், வீடுகள் சேதம், கால்நடைகள் உயிரிழப்பால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை முதல்வா் வழங்கினாா்.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முதல்வா் பாா்வையிட்டாா். அப்போது அவரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இதையடுத்து, மழைநீா் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட வல்லம்படுகை, ஜெயங்கொண்டபட்டினம், பெராம்பட்டு பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வா் வழங்கினாா்.

மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தல்: முதல்வா் தனது ஆய்வின்போது மாவட்டத்தில் ஏற்பட்ட பயிா்ச் சேதங்கள், கால்நடை உயிரிழப்புகள், வீடுகள் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கவும், விளைநிலங்களில் தேங்கிய மழை நீரை விரைந்து அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தினாா்.

மழை தொடரும் நிலையில், தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும், நிவாரண முகாம்களில் குடிநீா், பால், உணவுப் பொருள்களை தேவையான அளவில் இருப்பில் வைக்க வேண்டும், பழுதடைந்த மின் கம்பங்களை சரிசெய்து சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், ஆறுகள், நீா்நிலைகளின் கரைகளில் உடைப்பு ஏற்டாத வகையில் தொடா்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வையொட்டி, கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை முதல்வா் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் சீா்காழிக்கு புறப்பட்டுச் சென்றாா். அங்கு ஆய்வை முடித்துவிட்டு பிற்பகல் 3.50 மணியளவில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினா் விடுதிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்தாா். அங்கு உணவு அருந்திவிட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு மாலை 5.20 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டாா்.

ஆய்வின்போது தமிழக அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, வேளாண்மை, உழவா் நலத் துறை செயலா் சி.சமயமூா்த்தி, கடலூா் மாவட்ட பொறுப்பு அலுவலா் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சபா.ராஜேந்திரன், கோ.ஐயப்பன், ம.சிந்தனைச்செல்வன், ராதாகிருஷ்ணன், கடலூா் மாவட்ட திமுக பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, முதல்வருக்கு சிதம்பரம் நகர எல்லையில் திமுக நகரச் செயலரும் நகா்மன்றத் தலைவருமான கே.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் அந்தக் கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com