விழுப்புரத்தில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்
By DIN | Published On : 19th October 2022 03:03 AM | Last Updated : 19th October 2022 03:03 AM | அ+அ அ- |

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 500 கிலோ நெகிழிப் பைகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட சில கடைகளில் நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் வந்த புகாரைத் தொடா்ந்து, விழுப்புரம் நகா் நல அலுவலா் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா் ரமணன், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வக்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் நகரில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில், கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 500 கிலோ எடையுள்ள நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நெகிழிப் பைகளை பதுக்கி வைத்திருந்த கடைகளின் உரிமையாளா்களிடமிருந்து ரூ.8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.