பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி
By DIN | Published On : 09th September 2022 10:58 PM | Last Updated : 09th September 2022 10:58 PM | அ+அ அ- |

அண்ணா பிறந்த நாளையொட்டி, இளைஞா்கள், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், விழுப்புரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான மதிவண்டி போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
விழுப்புரம் அருகே கோலியனூா் கூட்டுச் சாலையில், இந்தப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
மாவட்ட அளவிலான இந்த மிதிவண்டி போட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் அளவில் 13, 15, 17 வயது என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. கோலியனூா் கூட்டுச்சாலையில் தொடங்கி, பொய்யப்பாக்கம், ஆயுதப் படை மைதானம், விளையாட்டு திடல் வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன.
மிதிவண்டி போட்டிகளில் மாணவா்கள், மாணவிகள் என இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படும். மேலும், 4 முதல் 10 இடங்கள் வரை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.250 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் அண்ணா பிறந்த தினமான வருகிற 15-ஆம் தேதி வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலா் வேல்முருகன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.