விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாரளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்துக்கு நாம் தமிழா் கட்சி ஒன்றியச் செயலா் மோகன்ராஜ் தலைமையில் பொதுமக்கள் திரளானோா் வெள்ளிக்கிழமை திரண்டு வந்து மனு அளித்தனா். அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது:
கண்டமங்கலம் அருகே உள்ள வி.அகரம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் 11 பேருக்கு பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வங்கிக் கணக்கில் தலா ரூ.2.25 லட்சம் நிதி கிடைத்தது.
இந்த நிலையில், விழுப்புரம் அருகே பாக்கம் கூட்டுச் சாலையைச் சோ்ந்த கட்டுமான ஒப்பந்ததாரா் மணியும், வி.அகரம் கிராமத்தைச் சோ்ந்த பாபு, குமாா் ஆகியோரும் வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி, 11 பேரிடமிருந்து ரூ.15 லட்சத்துக்கு மேல் பெற்றுக்கொண்டு, இதுவரை முழுமையாக வீடுகளைக் கட்டித் தராமல் மோசடி செய்துள்ளனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.