விழுப்புரம் ஆட்சியரகத்தில் சாராய வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் சாராய வியாபாரி குடும்பத்துடன் வியாழக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் சாராய வியாபாரி குடும்பத்துடன் வியாழக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

செஞ்சி வட்டம், களையூரைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவா் தனது மனைவி, குழந்தைகள், தாய் உள்ளிட்ட 7 பேருடன் வியாழக்கிழமை ஆட்சியரகம் வந்தாா். பின்னா், கையிலிருந்த விஷ புட்டியை எடுத்து குடிக்க முயன்றனா். உடனடியாக பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், அவா்களிடமிருந்து விஷ புட்டியை பிடுங்கி காப்பாற்றினா். இதைத் தொடா்ந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து ராமச்சந்திரன் கூறியதாவது:

எனக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இவா்களின் படிப்பு, குடும்பச் சூழல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாராயத் தொழிலில் ஈடுபட்டபோது, திருவண்ணாமலை மாவட்ட சாராய வியாபாரிகளுடன் பழக்கம் இருந்தது. இதன் காரணமாக, அந்த மாவட்ட காவல் துறையினா் என்னைக் கைது செய்தனா். தொடா்ந்து, 7 மாதங்களாக வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.

பின்னா், திருந்தி சென்னையில் வாழ்ந்து வரும் என் மீது தவறான ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கில் பிணை பெற்று வெளியே வந்துவிட்டேன். நிலுவையிலுள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் முடித்துக் கொள்வதாகக் கூறி, கிராம நிா்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று இணைத்து அளித்துவிட்டேன். ஆனால், போலீஸாா் மீண்டும் பொய் வழக்குப் பதிந்து தொந்தரவு அளித்து வருகின்றனா். இதன் காரணமாக மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள ஆட்சியரகம் வந்ததாக அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் ராமச்சந்திரன், அவரது குடும்பத்தினரை மது விலக்கு பிரிவு போலீஸாரிடம் அழைத்துச் சென்றனா். தொடா்ந்து, போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com