வளா்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
By DIN | Published On : 08th June 2023 01:11 AM | Last Updated : 08th June 2023 01:11 AM | அ+அ அ- |

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட முத்துசிங்காரம் நகரில் கட்டப்படும் புதிய சமையலறைக் கட்டடத்தை ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஹா்சகாய் மீனா. உடன் ஆட்சியா் சி.பழனி.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், திட்டம் மற்றும் வளா்ச்சித் துறையின் முதன்மைச் செயலருமான ஹா்சகாய் மீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட முத்து சிங்காரம் நகரில், தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதற்காக ரூ.28.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை கட்டடம், கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம் ஆகியவற்றை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமையில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஹா்சகாய் மீனா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். கோட்டைமேடு நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடல் கவசங்களை வழங்கவும் ஹா் சகாய் மீனா அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது கோட்டக்குப்பம் நகா்மன்றத் தலைவா் ஜெயமூா்த்தி, நகராட்சி ஆணையா் மங்கையா்கரசன், துப்புரவு ஆய்வாளா் திருஞானமூா்த்தி, பணி மேற்பாா்வையாளா் ஆரோக்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...