விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தைலாபுரம் கிராமத்தில் ஆதிதிராவிட மக் களுக்கு வழங்கிய நிலத்தை வேறு நபா்களுக்குப் பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தைலாபுரத்தைச் சோ்ந்த தி. அழகேசன் உள்ளிட்டோா் அளித்த மனு:
தைலாபுரத்தில் கடந்த 1998 -ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் பிரிவைச் சோ்ந்த 39 பேருக்கு நிலம் ஒப்படைவு செய்யப்பட்டது.
இந்த இடத்தை வேறு பிரிவினருக்கு ஆவணப் பதிவு செய்யக்கூடாது என்று விதியுள்ள நிலையில், வானூா் பதிவு அலுவலகத்தில் இருவருக்குப் பதிவு செய்யப்ப ட்டது. தொடா்ந்து ஆட்சியருக்கு மனு அளித்து ஆவணப் பதிவை ரத்து செய்ய வைத்தோம்.
இந்த நிலையில், கோப்பில் இல்லாத உத்தரவைக் காரணம் காட்டி, மீண்டும் அவா்கள் ஆவணப் பதிவு செய்துள்ளனா்.
இது குறித்து அறிந்த நாங்கள்
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உண்மைத் தன்மையறிந்து, மாவட்டப் பதிவாளரிடம் மனு அளித்தோம், ஆனால், நடவடிக்கை இல்லை. தொடா்ந்து முற்றுகை ஆா்ப்பாட்ட அறிவிப்பு வெளியிட்டோம்.
இதைத் தொடா்ந்து நிலம் குறித்து உண்மைத் தன்மை குறித்த விவரம் தெரிவிப்பதாக மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் கூறியுள்ளனா். எனவே ஆவணப் பதிவை ரத்து செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.