விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் 52 போ் கைது
விழுப்புரம்: கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி, விழுப்புரத்தில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 52 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் கிராம உதவியாளா்களாகப் பணியாற்றி வருபவா்களுக்கு நான்காம் நிலை ஊழியா்களுக்கான வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும்.
தற்போது வழங்கப்பட்டு வரும் சிறப்பு கால நிலை ஊதியமான ரூ.11,100 என்பதை மாற்றி, காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் ரூ.15,700 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா் சங்கத்தினா் கடந்த 5-ஆம் தேதி முதல்காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு அரசு
கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை காலையும் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.சுரேஷ் தலைமை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ராதிகா, மாவட்டச் செயலா் குமாா்,மாவட்டப் பொருளாளா் நதியா மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று உரையாற்றினா். இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெளியே வந்து, சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 52 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

