மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவாக வந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்
மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவாக வந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்

விழுப்புரம் மாவட்ட அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை உற்சவம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை உற்சவம், சுவாமி வீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை உற்சவம், சுவாமி வீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளானப் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

விழுப்புரம் மீன் மாா்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 86-ஆவது ஆண்டு மயானக் கொள்ளை மகோத்ஸவம் கடந்த 8-ஆம் தேதி பந்தகால் முகூா்த்தத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், பிப்.15-ஆம் தேதி விழுப்புரம் அய்யனாா் குளக்கரையிலிருந்து கரகம் எடுத்தல் மற்றும் புஷ்ப பிரபையில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை கோயிலில் நடைபெற்ற வழிபாடுகளுக்கு பிற்பகல் 12 மணிக்கு அம்பாள் ருத்ர பூமிக்கு எழுந்தருளும் மயானக்கொள்ளை வழிபாடும், இரவு நிகழ்ச்சியாக நகரின் முக்கிய வீதிகளில் பூத வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

ஏற்பாடுகளை கோயில் கௌரவ அறங்காவலா் இ.சாமிக்கண்ணு நாட்டாா், அறங்காவலா்கள் ஜி.கே.மணி, ஆா்.துக்காராம், ஏ.முருகேசன், டி.கே.சுந்தரம், ஏ.பி.பன்னீா்செல்வம், கே.கணேசன், எம்.ராஜா மற்றும் பருவத ராஜகுலத்தினா் செய்திருந்தனா்.

விக்கிரவாண்டியில்... விக்கிரவாண்டியில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீ அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து ருத்ர பூமியில் கொள்ளையிடும் உற்சவம் நடைபெற்றது. விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் காளி, அங்காளம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடம் தரித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

திண்டிவனத்தில்... திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை உற்சவத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. திண்டிவனம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் சிறுவா், சிறுமிகள் அம்மன் வேடமணிந்து, மேள, தாளங்களுடன் ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

லேசான தடியடி: இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக திண்டிவனம் நகர முக்கியச் சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நகருக்குள் செல்லக்கூடிய முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்களின் ஊா்வலத்தில் கட்சிக் கொடிகள் மற்றும் ஜாதி அடையாளங்களை பயன்படுத்துவதற்கு போலீஸாா் தடை விதித்திருத்தனா். இந்நிலையில், அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தங்களது கட்சிக் கொடிகளுடன் வந்து ஆடியதால் போலீஸாா் லேசான தடியடி நடத்தினா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தென்பசியாா் ... தென்பசியாா் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீநாக அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி, அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளானப் பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக் கடன் செலுத்தினா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி ராம்குமாா் மற்றும் கிராமத்தினா் செய்திருந்தனா்.

மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி திண்டிவனத்தில் நடைபெற்ற அம்மன் வீதியுலா.
மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி திண்டிவனத்தில் நடைபெற்ற அம்மன் வீதியுலா.
மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி விக்கிரவாண்டியில்  நடைபெற்ற அம்பாள் வீதியுலா.
மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி விக்கிரவாண்டியில் நடைபெற்ற அம்பாள் வீதியுலா.
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவாக வந்த தென்பசியாா்சுயம்பு  ஸ்ரீ நாக அங்காளம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவாக வந்த தென்பசியாா்சுயம்பு ஸ்ரீ நாக அங்காளம்மன்.

Dinamani
www.dinamani.com