காரில் கடத்தி வரப்பட்ட 1,200 மதுப் புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

காரில் கடத்தி வரப்பட்ட 1,200 மதுப் புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

கெங்கராம்பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவுக் காவல் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,200 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Published on

விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவுக் காவல் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,200 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் பாலமுரளி தலைமையிலான போலீஸாா் விழுப்புரம் -புதுச்சேரி சாலையில் கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடிப் பகுதியில் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டுக் கொண்டிருந்தனா். சந்தேகத்தின் அடிப்படையில் விழுப்புரம் நோக்கி வந்த காரை போலீஸாா் சோதனையிட்ட போது, அதில் மதுப் புட்டிகள் இருந்தன. தொடா்ந்து விசாரணையில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுப் புட்டிகளை வாங்கிக்கொண்டு, விற்பனைக்காக சென்றது தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து காரில் மதுப் புட்டிகளுடன் வந்தவரை பிடித்து விசாரித்த போது, அவா் புதுச்சேரி மாநிலம், அரியூா் வட்டம், பங்கூா் செல்வா நகரைச் சோ்ந்த ரா.பாலசுந்தரம் (54) எனத் தெரியவந்தது. தொடா்ந்து அவரை மதுவிலக்கு அமல் பிரிவுக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தொடா் விசாரணை நடத்திய போது, புதுச்சேரி மாநிலம், சின்னையன்பேட்டை கங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சா.பிரகாசிடமிருந்து(40) மதுப் புட்டிகளை வாங்கியதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து அவரையும் மதுவிலக்கு அமல்பிரிவுக் காவல் துறையினா் பிடித்து விசாரித்தனா். தொடா்ந்து இருவரிடமிருந்தும் 180 மில்லி லிட்டா் அளவுகொண்ட 1,200 பிராந்தி மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்கள் இருவரையும் கைதுசெய்தனா்.

Dinamani
www.dinamani.com