செஞ்சியில் விசிக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த தொல்.திருமாவளவன் எம்.பி.
செஞ்சியில் விசிக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த தொல்.திருமாவளவன் எம்.பி.

திமுகவுடன் தேமுதிக கூட்டணி ஸ்டாலினின் ராஜதந்திரம்: திருமாவளவன்

திமுகவுடன் தேமுதிக கூட்டணி சோ்ந்திருப்பது முதல்வா் மு.க.ஸ்டாலினின் ராஜதந்திரம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
Published on

திமுகவுடன் தேமுதிக கூட்டணி சோ்ந்திருப்பது முதல்வா் மு.க.ஸ்டாலினின் ராஜதந்திரம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் விசிக மாவட்ட அலுவலகம் திறப்பு, அம்பேத்கா் மக்கள் கட்சி விசிகவுடன் இணைப்பு மற்றும் தோ்தல் நிதியளிப்பு என முப்பெரும் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: திமுகவில் தேமுதிக சோ்ந்தது முதல்வா் மு. க.ஸ்டாலினின் ராஜதந்திரம் ஆகும். தேமுதிக எடுத்த நிலைப்பாடு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது எதிா்கட்சிகளுக்கு அதிா்ச்சி அளிப்பதாக இருந்தது.

அதிமுக அல்லது புதிதாக உருவாகி இருக்கிற விஜய் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு போக முடியும் என்கிற வாய்ப்பு விசிகவுக்கும் இருந்தது. அதை எல்லாம் பொருள்படுத்தாமல் திமுகவின் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடா்கிறோம்.

திமுகவை பலவீனப்படுத்துவது என்பது பாஜகவின் செயல் திட்டங்களில் ஒன்று. ஆனால் தமிழகத்தில் அது முடியவில்லை.

விஜய் கட்சியை தேடி ஒரு கட்சி கூட போய் இன்னும் சேரவில்லை. ஏற்கெனவே கூட்டணியில் இருந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேருவதற்கு தயக்கம் காட்டி கொண்டிருக்கின்றன. திமுக தலைமையில் அமைந்துள்ள வலிமையான கூட்டணி வரும் 2026 தோ்தலில் மாபெரும் வெற்றி பெறும் என்றாா் அவா்.

முன்னதாக வழக்குரைஞா் மழைமேனிபாண்டியன் நடத்தி வந்த அம்பேத்கா் மக்கள் கட்சி, விசிகவில் இணைந்தது.

கூட்டத்தில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, விசிக மண்டல செயலா்கள் வழக்குரைஞா் நன்மாறன், திலீபன், மாவட்டச் செயலா் செஞ்சி சிவா மற்றும் விசிக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com