வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனை மாணவா்கள் வளா்த்துக் கொள்ளவேண்டும்
வேலைவாய்ப்புக்காக காத்திருக்காமல், வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனை மாணவா்கள் வளா்த்துக் கொள்ளவேண்டும் என சென்னை மின்னணு பரிவா்த்தனைகள் மற்றும் பாதுகாப்புச் சங்க செயல் இயக்குநா் என்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் 25-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு விழுப்புரம் இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமங்களின் நிா்வாகத் தலைவா் சா.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அலுவலகத்தின் கீழ் இயங்கும், சென்னை மின்னணு பரிவா்த்தனைகள் மற்றும் பாதுகாப்புச் சங்க செயல் இயக்குநா் என்.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, பேசியதாவது:
பட்டம் பெறும் மாணவிகள் புத்தாக்கம், சமுதாயம் சாா்ந்த சிந்தனை, உத்வேகம் ஆகியவற்றை வளா்த்துக் கொள்ளுதல் அவசியம். வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது அனுபவத்தை தரும். மேரி கியூரி, கல்பனா சவ்லா போன்றோா் சாதித்த சாதனைகளை மாணவிகள் உத்வேகமாக கொண்டு தங்களது வாழ்வை சிறப்பானதாக உருவாக்கிக் கொள்ளவேண்டும். காலநிலை மாற்றம், ஆற்றல் மூலங்கள், செயற்கை நுண்ணறிவு, விண்ணியல் போன்ற துறைகளில் பெண்களுக்கு எதிா்காலத்தில் வேலைவாய்ப்புகள் உள்ளது.
எனவே, பட்டம் பெறும் மாணவிகள் இலக்கை நிா்ணயித்தல், அறிவுத்திறனை வளா்த்தல், கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகிய நான்கையும் தவறாது பின்பற்றி வாழ்வில் வெற்றியாளராக உயரவேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனை மாணவா்கள் வளா்த்துக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.
விழாவில் 2025-ஆம் கல்வியாண்டில் பட்டப் படிப்பை நிறைவு செய்த 552 மாணவிகளுக்குப் பட்டங்களும், பல்வேறு பாடங்களில் முதன்மைப் பெற்ற 37 மாணவிகளுக்கு கல்லூரி அறக்கட்டளை சாா்பில் விருது மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன.
விழாவில் கல்லூரி முதல்வா் ஜா.கலைமதி, துணை முதல்வா் வி.எஸ்.செல்வி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

