என் மகனின் திருமணம் எப்பொழுது நடக்கும்... நாங்கள் கட்டி வரும் புதிய வீட்டின் பணிகள் எப்பொழுது முடியும்... பரிகாரம் என்ன செய்ய வேண்டும்..?
By DIN | Published On : 09th July 2021 03:49 PM | Last Updated : 09th July 2021 03:49 PM | அ+அ அ- |

என் மகனின் திருமணம் எப்பொழுது நடக்கும்... நாங்கள் கட்டி வரும் புதிய வீட்டின் பணிகள் எப்பொழுது முடியும்... பரிகாரம் என்ன செய்ய வேண்டும்..?
-வாசகி, செய்யாறு.
உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்குமதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் உச்சம் பெற்று களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. இதனால் சம அந்தஸ்தில் உள்ள பெண் அமையும்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை தன் ஆட்சி வீடான மீன ராசியான சுக ஸ்தானத்தின் மீதும் படிகிறது.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் மூலத் திரிகோணம் பெறுகிறார்.
பாக்கிய ஸ்தானத்தில் சூரிய பகவான், களத்திர நட்பு ஸ்தானத்தில் சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு பகவான்களும் இணைந்திருக்கிறார்கள்.
தற்சமயம் சனி பகவானின் தசையில் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான புத பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். இந்த காலகட்டத்திற்குள் வீட்டையும் கட்டி முடித்து விடுவீர்கள். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.