எனக்கு வயது 40. திருமண யோகம் எப்போது கூடும்? உடல்நிலையில் முன்னேற்றம் அடையுமா? வீடு கட்டுவேனா?
-டி.பன்னீர்செல்வம், ஈரோடு.
உங்களுக்கு விருச்சிக லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம், லக்னம், ஆறாமதிபதி செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் பாக்கியாதி சந்திர பகவானின் சாரத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார்.
தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டுக்குமதிபதியுமான குரு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சனி பகவானுடன் இணைந்து ஐந்தாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும், ஏழாம் பார்வையாக தன் ஆட்சி வீடான ஐந்தாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக ஏழாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானையும் பார்வை செய்கிறார்.
பாக்கியாதிபதியான சந்திர பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து அஷ்ட ஸ்தானமான எட்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் களத்திர நட்பு ஸ்தானதிபதியான சுக்கிர பகவானையும், சூரிய புத (புத ஆதித்ய யோகம்) பகவான்களையும் பார்வை செய்கிறார்.
தற்சமயம் ராகு பகவான் தசையில் இறுதிப் பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பாக்கியாதிபதியின் புத்தி நடக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் படிப்படியாக மேம்பாடு அடையத் தொடங்கும்.
தற்போது செய்துவரும் தொழிலுடன் உணவுத் தொழிலையும் கூடுதலாகச் செய்யலாம். 2025-ஆம் ஆண்டில் வீடு கட்டும் யோகம் உண்டாகும். பலம் பெற்ற குரு பகவானின் தசையாக உள்ளதால், செய் தொழிலில் சிறப்பான இடத்தை எட்டி விடுவீர்கள்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் களத்திர ஸ்தானதிபதிக்கு ஏற்ற சம தோஷமுள்ள பெண் அமைந்து, திருமணம் கை கூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.