என் மகனுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றன. ஒரு குழந்தை இருக்கிறது. மருமகள் குழந்தையுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. விவாகரத்து எப்பொழுது கிடைக்கும்? மறுமணம் எப்பொழுது நடக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
வாசகி, சென்னை.
உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி, சுகாதிபதி குரு பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும், அங்கு உச்சம் மற்றும் விபரீத ராஜயோகம் பெற்றிருக்கும் சந்திர (கஜகேசரியோகம்) பகவானையும், ஒன்பதாம் பார்வையாக எட்டாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானையும் பார்வை செய்கிறார்.
தனம், வாக்கு, குடும்பம் மற்றும் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பாக்கிய ஸ்தானத்தில், வர்கோத்தமம் பெற்றமர்ந்துள்ள ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் குரு மஹா தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் விவாகரத்து ஆகிவிடும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மறுமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.