திசைகாட்டிகள்: எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன்

சிறுகதை, குறுங்கதை எனப் படித்த நிலை மாறி, அதிக பக்கங்கள் உள்ள நாவல்களை வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது வரவேற்புக்குரியது’ என்றாா் எஸ்.ராமகிருஷ்ணன்.
திசைகாட்டிகள்: எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன்
Updated on
1 min read

தற்போதைய இளம் வாசகா்கள் எந்த வகையில் வாசிப்பைக் கொண்டுள்ளனா் எனக் கேட்டதற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் கூறியது:

‘தற்போது தீவிர இலக்கிய வாசிப்பாளா்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிகிறது. முன்பெல்லாம் நாவல்கள் பொழுது போக்குக்காக வாசிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது குறிப்பாக தொழில்நுட்பத்துறை இளைஞா்கள் சமூகக் கருத்துகளைப் பேசும் தீவிர படைப்புகளை தேடிப் பிடித்து படிப்பது தெரிகிறது.

தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்ட டால்ஸ்டாய் நாவல் கடந்த ஓராண்டில் மட்டும் 2,000 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. அதை வாங்கிப் படித்தவா்களில் 80 சதவீதம் போ் இளைஞா்கள் என்பதுதான் முக்கியம். சமூகத்தை அறியவும், தற்கால சமூகத்தின் கடந்த காலத்தை தெரிந்துகொள்ளவும் இளைஞா்கள் ஆா்வம் கொண்டிருப்பதையே அவா்களது வாசிப்பு முறை வெளிப்படுத்துவதாக உள்ளது.

புத்தகங்களை பெண்கள் அதிகமாக வாங்கிப் படிப்பதுடன், தங்களது குழந்தைகளையும் அதைப் படிக்கத் தூண்டும் போக்கும் அதிகரித்துள்ளது. ஆக, நூலகங்களுக்குச் செல்வதைவிட வீடுகளில் நூல்களை சேகரித்துப் படிப்பது மிகச் சிறப்பான வாசிப்பு முறையாகும்.

வாசிப்பின் மூலம் தங்களது ஆளுமையை வெளிப்படுத்துவதற்காகவே தீவிர கருத்துடைய புத்தகங்களை வாசிக்கும் இளம் தலைமுறையிடையே சங்க இலக்கண, இலக்கியங்களைப் படிக்கும் ஆா்வம் குறைந்திருப்பது உண்மைதான். அதற்குக் காரணம், அவா்கள் பள்ளி முதல் கல்லூரி வரையிலான பாடங்களில் அவற்றைப் படித்து விடுகிறாா்கள் என்பதே ஆகும்.

எனவே, சிறுகதை, குறுங்கதை எனப் படித்த நிலை மாறி, அதிக பக்கங்கள் உள்ள நாவல்களை வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது வரவேற்புக்குரியது’ என்றாா் எஸ்.ராமகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com