புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் பயணிகள் வாகன விற்பனை 2 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய சந்தைகளில் 1983-ஆம் ஆண்டு டிசம்பா் 14-ஆம் தேதியன்று மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதல் காரை விற்பனை செய்தது. அப்போது, நிறுவனத்தின் தனித்துவ அடையாளமாகத் திகழ்ந்த மாருதி 800 மாடல் காா் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 37 ஆண்டுகளுக்குள் இந்திய சந்தையில் நிறுவனத்தின் மொத்த பயணிகள் வாகன விற்பனை 2 கோடி என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
1 கோடி வாகன விற்பனை இலக்கை எட்ட நிறுவனத்துக்கு 29 ஆண்டுகள் தேவைப்பட்டது. இந்த நிலையில், அடுத்த 1 கோடி வாகன விற்பனை இலக்கு 8 ஆண்டுகளுக்குள் எட்டப்பட்டு சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.