
பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) மூன்றாம் காலாண்டு லாபம் 7.12 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வருவாய் ரூ.14,854.24 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டப்பட்ட ரூ.15,257.5 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 2.64 சதவீதம் குறைவாகும்.
நிகர லாபம் ரூ.230.11 கோடியிலிருந்து 7.12 சதவீதம் அதிகரித்து ரூ.246.51 கோடியாக இருந்தது.
வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 12.11 சதவீதத்திலிருந்து அதிகரித்து 16.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், நிகர வாராக் கடன் விகிதம் 8.90 சதவீதத்திலிருந்து 8.22 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2017-18 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வாராக் கடன்களுக்கு ரூ.2,996.42 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் அதற்கான ஒதுக்கீடு ரூ.2,565.77 கோடியாக குறைந்துள்ளது என பிஎன்பி வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...