
இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் உள்நாட்டில் 1 கோடி வாகனங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் யமஹாவுக்கு சொந்தமாக சென்னை, உத்தரபிரதேசத்தில் சர்ஜாபூர் மற்றும் ஹரியாணாவில் பரீதாபாத் ஆகிய மூன்று இடங்களில் ஆலைகள் உள்ளன. இந்த மூன்று ஆலைகளிலும் நிறுவனத்தின் இருசக்கர வாகன உற்பத்தி 1 கோடியைக் கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
1 கோடியாவது தயாரிப்பாக எப்இசட்எஸ்-எப்ஐ வெர்ஷன் 3.0 பைக் சென்னை ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது, யமஹா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர் என்று அந்த அறிக்கையில் இந்தியா யமஹா மோட்டார் தெரிவித்துள்ளது.
இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடி வாகனங்களில் 80 சதவீதம் சர்ஜாபூர் மற்றும் பரீதாபாத் ஆலைகளில் தயாரிக்கப்பட்டன. எஞ்சிய 20 சதவீத வாகனங்கள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டன. 1 கோடி உற்பத்தியில் மோட்டார்சைக்கிள் மாடல்களின் பங்களிப்பு 77.88 லட்சமாகவும், ஸ்கூட்டர் மாடல்களின் பங்களிப்பு 22.12 லட்சமாகவும் உள்ளது என இந்தியா யமஹா மோட்டார் மேலும் தெரிவித்துள்ளது.