பணவீக்கம் 3.07 சதவீதமாக குறைவு

மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஏப்ரல் மாதத்தில் 3.07 சதவீதமாக குறைந்துள்ளது.
பணவீக்கம் 3.07 சதவீதமாக குறைவு


மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஏப்ரல் மாதத்தில் 3.07 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை அதிகமாக இருந்தபோதிலும், எரிபொருள் மற்றும் தயாரிப்பு துறை பொருள்களின் விலை குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக, மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் ஏப்ரலில் 3.07 சதவீதமாக குறைந்தது.
இது, நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 3.18 சதவீதமாகவும், பிப்ரவரியில் 2.93 சதவீதமாகவும், 2018 ஏப்ரலில் 3.62 சதவீதமாகவும் காணப்பட்டது.
மார்ச் மாதத்தில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 5.68 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்தில் இது 7.37 சதவீதமாக அதிகரித்தது. குறிப்பாக, காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
கடந்த 2018 டிசம்பரில் காய்கறிகளுக்கான பணவீக்கம் -19.29 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது. ஆனால், அதன்பிறகு காய்கறிகளின் விலை அதிகரித்தே காணப்பட்டது என புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அசோசேம் அமைப்பின் துணை பொது செயலாளர் சௌரப் சன்யால் கூறியதாவது: மொத்தவிலை மற்றும் சில்லறை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கான 4 சதவீதம் என்ற அளவுக்குள் உள்ளன. எனவே, ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க அதிக வாய்ப்புள்ளது என்றார் அவர்.
உணவு மற்றும் எரிபொருள்களின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பால் ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் சில்லறை பணவீக்கம் 2.9-3 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே மதிப்பீடு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com