
மும்பை: பொதுத் துறையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் வங்கியின் நிகர இழப்பு ரூ.6,581.49 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு அதிகமானதையடுத்து கார்ப்பரேஷன் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வங்கி மொத்தம் ரூ.4,187.65 கோடி வருவாய் ஈட்டியது.
இது, 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.4,642.45 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவாகும்.
வருவாய் குறைந்து, வாராக் கடன் இடர்களை எதிர்கொள்வதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை அதிகரித்ததையடுத்து வங்கிக்கு கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.6,581 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ஏற்பட்ட இழப்பான ரூ.1,838.39 கோடியுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகமாகும்.
வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 17.35 சதவீதத்திலிருந்து குறைந்து 15.35 சதவீதமாகியுள்ளது.
அதேசமயம், வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.4,441.29 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.8,505.87 கோடியானது.
கடந்த 2018-19 முழு நிதியாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.6,325.29 கோடியாகும். 2017-18 நிதியாண்டில் இழப்பு ரூ.4,049.93 கோடியாக இருந்தது என மும்பை பங்குச் சந்தையிடம் கார்ப்பரேஷன் வங்கி தெரிவித்துள்ளது.