
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடு 59 சதவீதம் அதிகரித்துள்ளதாக கிராண்ட் தோர்ன்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 211 கோடி டாலராக (ரூ.14,700 கோடி) இருந்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு இதே கால அளவில் இந்த முதலீடு 133 கோடி டாலராக (ரூ.9,300 கோடி) மட்டுமே காணப்பட்டது. ஆக, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் இவ்வகை முதலீடு 59 சதவீதம் அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார ஸ்திரமற்ற சூழலுக்கிடையிலும், பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் 67-லிருந்து 69-ஆக உயர்ந்துள்ளது.
தனியார் பங்கு முதலீட்டை ஈர்ப்பதில் உள்கட்டமைப்புத் துறை பெரும்பங்கினை வகுத்துள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்டில், ஜிஐசி நிறுவனம் 62.2 கோடி டாலரை ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சரில் மேற்கொண்ட முதலீடே அதிகபட்ச அளவாக கருதப்படுகிறது.
உள்கட்டமைப்பு துறையில் இதுவரையில் இல்லாத அளவிற்கான முதலீடாக இது பார்க்கப்படுகிறது.
ஸ்டார்ட் அப்ஸ், இ-காமர்ஸ், தகவல் தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளிலும் 10 கோடி டாலருக்கும் அதிகமான தனியார் பங்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கிராண்ட் தோர்ன்டான் தெரிவித்துள்ளது.