சிறிய நிறுவனப் பங்குகள்: தேவை எச்சரிக்கை!

கடந்த இரண்டு மாதங்களாக சென்செக்ஸ், நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் தரப் பங்குகளைக் காட்டிலும் நடுத்தர, சிறிய  நிறுவனப் பங்குகள் அதிக
சிறிய நிறுவனப் பங்குகள்: தேவை எச்சரிக்கை!
Updated on
2 min read



கடந்த இரண்டு மாதங்களாக சென்செக்ஸ், நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் தரப் பங்குகளைக் காட்டிலும் நடுத்தர, சிறிய  நிறுவனப் பங்குகள் அதிக ஆதாயம் பெற்று முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் ஏப்ரல் 24 வரையிலான காலத்தில் முன்னணி சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடு 12 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.  

முன்னணி நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் குறியீடு 10 சதவீதத்திற்கும்  மேல்  உயர்ந்துள்ளது. ஆனால், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 குறியீடு  8 சதவீதமும், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 7.7 சதவீதமும்தான் உயர்ந்துள்ளது. இவற்றுடன் ஒப்பிடும் போது, ஸ்மால் கேப், மிட்கேப் குறியீடுகள் அதிகம் ஏற்றம் பெற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.

ஆனால், இந்த நடவடிக்கை தனிப்பட்ட பங்குகளை மையமாகக் கொண்டிருந்தது. ஸ்மால் கேப் குறியீடு பட்டியலில் உள்ள முன்னணி நிறுவனப் பங்குகளில்  ஏறக்குறைய 70 பங்குகள் ஏப்ரல் மாதத்தில் இதுவரை 50 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளதாக "ஏஸ் ஈக்விட்டி' புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 1-24 வரையிலான காலத்தில் இந்தப் பட்டியலில் சோபா, கேப்ரியல் இந்தியா, டேக் சொல்யூஷன்ஸ், ஜென் டெக்னாலஜிஸ், டி.எச்.எஃப்.எல்., ஃபியூச்சர் என்டர்பிரைஸஸ் , காக்ஸ் அண்ட் கிங்ஸ், பஜாஜ் ஹிந்துஸ்தான், எச்.சி.எல். இன்ஃபோ சிஸ்டம்,  குவாலிட்டி மற்றும் ஈரோஸ் இன்டர்நேஷனல் ஆகிய முக்கியப் பங்குகளும் அடங்கும். இதில் ஈரோஸ் இண்டர்நேஷனல் மீடியா (154 சதவீதம்), ஆந்திரா சிமெண்ட் (130 சதவீதம்),  குவாலிட்டி (110 சதவீதம்), ஜேஎம்டி ஆட்டோ (100 சதவீதம்)  ஆகியவை அபரிமிதமாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபத்தை அளித்துள்ளன.  

இச்சூழ்நிலையில், நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் மீது நம்பிக்கை கொள்ள முடியமா என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. 

ஏற்கெனவே  திடீரென உச்சத்துக்கு சென்றுள்ள சிறிய நிறுவனப் பங்குகளை வாங்கலாமா? தவிர்க்கலாமா? என்றும் முதலீட்டாளர்களிடையே குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து ஆய்வாளர்கள் சமூகத்தில் பெரும்பாலானோர், "தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்' என்று எச்சரிக்கின்றனர். ஓர் அனுபவமுள்ள முதலீட்டாளராக இருந்தால், நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளில் பரிசோதனைக்கு தயாராகலாம்.  ஆனால்,  புதிய முதலீட்டாளர்கள் அல்லது ஒரு சிறிய போர்ட்ஃபோலியோவைக் கொண்டிருப்பவர்கள் முதல் தரப் பங்குகளில் கவனம் செலுத்துவதுதான் மிகவும் நல்லது என்கின்றனர் அவர்கள்.
கரோனா தொற்று பங்குச் சந்தையில் ஒரு தனித்துவமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தற்போதைய நிலைமை எவ்வாறு செல்கிறது என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. இச்சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது நிதி மற்றும் முதலீடுகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  

சிறிய மற்றும் நடுத்தரப் பங்குகள்  பொருளாதார மந்தநிலையின் போது உறுதியான மீட்சி இல்லாமல் உள்ளது. எதிர்காலத்தில், இந்த நிலை மேலும் மோசமடையக்கூடும் என்று கேபிடல்வியா குளோபல் ரிசர்ச் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சி முதலீட்டு ஆலோசகர் கெüரவ் கார்க் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான நிலையில், பொருளாதார செயல்பாடுகள் வேகம் எடுப்பதற்கு கணிசமான நேரம் எடுக்கும். எனவே, சிறிய மற்றும் நடுத்தரப் பங்குகளில்  கவனம் செலுத்தும் முதலீட்டாளர்கள், இழப்பு அதிகமாக இருந்தால்,  தங்கள் நிலையை மறுமதிப்பீடு செய்து பங்குகளை விற்று வெளியேற வேண்டும். நிலைமை மேம்படும் போது  தங்களது முதலீட்டுத் தொகுப்பை போர்ட்ஃபோலியோவை மீண்டும் உருவாக்க அந்த நிதியைப் பயன்படுத்தலாம் என்று  முதலீட்டு ஆலோசகர்கள்  கூறுகின்றனர்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமலில் உள்ள  நாடு தழுவிய ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், மத்திய அரசு இரண்டாம் கட்டமாக பெரிய அளவிலான நிதித் தொகுப்பை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே சிறிய, நடுத்தர நிறுவனப் பங்குகள் அபரிமிதமாக ஏற்றம் பெற்றுள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும் என்று  வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரப் பின்னடைவால்  சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உண்மையில் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன. இதுதான் யதார்த்தமான விஷயமாகும். இந்நிலையில், சில சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இது போன்ற இருண்ட காலங்களில்  மேலும் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனஅஞ்சப்படுகிறது.  எனவே, இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு விவேகமான அணுகுமுறையாக, முதலீட்டாளர்கள் சிறிய, நடுத்தர நிறுவனப் பங்குகளைக் காட்டிலும்,  முதல் தர முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு  மாறுவதை  பரிசீலிக்கலாம். 

இது நிச்சயமாக ஒரு கடினமான முடிவாக இருக்கலாம். ஆனால், அது நீண்ட காலத்திற்கு பலனளிக்கும் என்பது மட்டும் நிச்சயம் என்கின்றனர் வல்லுநர்கள். சமீபத்திய வீழ்ச்சிக்குப்  பிறகு தற்போதைய நிலையில் சிறிய, நடுத்தரப் பங்குகள் கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும்,  முதலீடு செய்யும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும்  என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பு  எச்சரிக்கை தேவை என்பதே உண்மை நிலை...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com