மும்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு 107 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆறு மாத காலத்தில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதம் பண வீக்கம் உச்சம் கண்டது. இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதத்திலும் பெரிய அளவில் மாறாமல் 6.3 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், மும்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு 107.54 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது.
அதேபோல், ஒரு லிட்டர் டீசல் 97.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாட்டின் தலைநகரான தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.54 ரூபாய்க்கும், டீசல் 89.87 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் பெட்ரோலானது 101.74 ரூபாய்க்கும், சென்னையில் 102.23 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நாடு முழுவதுமே பெட்ரோல், டீசல் விலையானது உயர்த்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மதிப்பு கூட்டு வரியை பொறுத்து ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் இடையே விலை மாறுபடுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் உணவு பொருள்களின் விலையும் மற்ற பொருள்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி, ஜூலை 7ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளது.