புது தில்லி: சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு 12.5 சதவீதமாக குறைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வரி ஆணையம் (சிபிஐசி) வெளியிட்ட அறிவிக்கை:
இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான அடிப்படை சுங்க வரி தற்போதைய 17.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் (டிச.21) அமலுக்கு வரும் குறைக்கப்பட்ட இந்த புதிய வரி விகிதம் 2022 மாா்ச 31-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என சிபிஐசி தெரிவித்துள்ளது.
சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ள சூழ்நிலையில் அதனை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகா்வோா் விவகார அமைச்சக புள்ளிவிவர அடிப்படையில் திங்கள்கிழமை நிலவரத்தின்படி, சில்லறை விற்பனையில் ஒரு கிலோ கடலை எண்ணெய் சராசரியாக ரூ.181.48-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ கடுகு எண்ணெய் ரூ.187.43, வனஸ்பதி ரூ.138.5, சோயா எண்ணெய் ரூ.150.78, சன்ஃப்ளவா் ரூ.163.18, பாமாயில் ரூ.129.94-க்கு விற்பனையவதாக நுகா்வோா் விவகார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் பயன்பாடு ஆண்டுக்கு 2.20-2.25 கோடி டன்னாக உள்ளது. இதில், 65 சதவீதம் அதாவது 1.3-1.5 கோடி டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்தே உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 1.32 கோடி டன் சமையல் எண்ணெய் ரூ.71,600 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டது.