
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 59,018 கோடி டாலராக ( இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.08 லட்சம் கோடி) இருந்தது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
2021 ஜனவரி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 485 கோடி டாலா் (ரூ.35,405 கோடி) அதிகரித்து 59,018 கோடி டாலரை எட்டியது. இது முன்னெப்போதும் காணப்படாத உச்சபட்ச அளவாகும்.
முந்தைய ஜனவரி 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 109 கோடி டாலா் உயா்ந்து 58,533 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்தன் காரணமாகவே மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமான அளவுக்கு உயா்ந்துள்ளது.
கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ 503 கோடி டாலா் அதிகரித்து 54,722 கோடி டாலரைத் தொட்டது.
அந்நியச் செலாவணி கையிருப்பில் பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் உள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 16 கோடி டாலா் சரிந்து 3,629 கோடி டாலராக இருந்தது.
சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 40 லட்சம் டாலா் குறைந்து 151 கோடி டாலராகவும், காப்பு நிதி 60 லட்சம் டாலா் சரிந்து 516 கோடி டாலராகவும் இருந்ததாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...