சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களின் வளர்ச்சி சதவீதம் 35% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனத் தயாரிப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்தியா பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும், இந்தியாவில் வாகன உதிரிபாகங்களின் மிகப்பெரிய இறக்குமதியாளராக சீனா தன் ஆதிக்கத்தைத் தொடர்கிறது. இதை உறுதிபடுத்தும் விதமாக, 2022 நிதியாண்டில் (FY22) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்களின் மொத்த மதிப்பு ஆண்டுக்கு 35%-ஆக அதிகரித்து 5.46 பில்லியன் அமெரிக்க டாலர்களாக(ரூ.43,100 கோடி) உள்ளது என இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் வாகன உதிரிபாகங்களின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவிலிருந்து வருவதாகவும் தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஜெர்மனி 11% பங்களிப்புடன் 2-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: இலங்கை: 3 மாம்பழத்தை ரூ.10 லட்சத்துக்கு வாங்கிய தமிழர்
கடந்த 2020-ல் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகமாக இருப்பதால், சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்திய அரசாங்கம் புதிய திட்டத்தை முன்னெடுத்தது. அதன்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது தொழிற்சாலையை நிறுவினால் தொடர் விநியோக சங்கிலி முறையில்(supply chain) தேவையை பூர்த்திசெய்து கொள்ளலாம். ஆனால், இத்திட்டம் இன்னும் சாதகமாக மாறவில்லை.
இதுகுறித்து ஏசிஎம்ஏ தலைவர் சஞ்சய் கபூர், ‘முற்றிலுமாக சீனாவைச் சாராமல் வருங்காலத்தில் இருக்கலாம் என்கிற நிலை சாத்தியமில்லை. இது ஒரு இரவில் நடக்கக்கூடிய விசயமல்ல. சார்புநிலையிலிருந்து விலக நாம் தொடர்ந்து தொழில்நுட்பங்களின் மீது முதலீடு செய்ய வேண்டும். மேலும், இதற்கு பல நிறுவனங்கள் வெவ்வேறு முறைகள் மூலம் பல்வேறு தீர்வுகளைக் காண வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.