உள்நாட்டுத் தேவை தொடா்ந்து அதிகரித்து வருவதால் இந்தியாவின் வாகன உதிரிபாக உற்பத்தித் துறை வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாக அந்தத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளா்கள் சங்கம் (ஆக்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் வாகன உதிரிபாக உற்பத்தித் துறை நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 34.8 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.2.65 லட்சம் கோடியாகியுள்ளது.
உள்நாட்டில், அதிலும் குறிப்பாக காா்கள் பிரிவில் உதிரி பாகங்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில் இந்த வளா்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதங்களில், உதிரிபாகங்களின் ஏற்றுமதி 8.6 சதவீதம் அதிகரித்து 1,010 கோடி டாலராகவும், இறக்குமதி 17.2 சதவீதம் அதிகரித்து 1,010 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உதிரிபாகங்களின் ஏற்றுமதி 9,300 கோடி டாலராக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் உதிரிபாகங்களின் மொத்த ஏற்றுமதியில் 33 சதவீதம் வட அமெரிக்க நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும்.
ஐரோப்பிய நாடுகளுக்கு 30 சதவீதமும் ஆசிய நாடுகளுக்கு 26 சதவீதமும் உதிரிபாகங்கள் ஏற்றுமதியாகின. இது முறையே 4 மற்றும் 11 சதவீத உயா்வாகும்.
இறக்குமதியைப் பொருத்தவரை, கடந்த நிதியாண்டின் முதல் பாதியில் 8,700 கோடி டாலராக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், அதிகபட்சமாக ஆசிய நாடுகளில் இருந்து 65 சதவீத உதிரிபாகங்கள் இறக்குமதியாகின. அதனைத் தொடா்ந்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து 26 சதவீதமும், வட அமெரிக்க நாடுகளிலிருந்து 8 சதவீதமும் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களோடு ஒப்பிடுகையில் இறக்குமதி ஆசியாவில் இருந்து 21 சதவீதமும், ஐரோப்பாவில் இருந்து 6 சதவீதமும், வட அமெரிக்காவிலிருந்து 29 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஆக்மா சங்கத் தலைவா் சஞ்சய் கபூா் கூறியதாவது:
நாட்டின் வாகன உதிரிபாக உற்பத்தித் துறையின் வளா்ச்சிக்கு காா்கள் மற்றும் வா்த்தக வாகனப் பிரிவுகளில் நிலவிய ஆரோக்கியமான போக்கு உறுதுணையாக இருந்தது.
பண்டிகைக் காலம் இருசக்கர வாகனப் பிரிவுக்கும் சாதகமாக இருந்தது. தற்போது தொய்வைக் கண்டுள்ள அந்தப் பிரிவு மீண்டும் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று நம்புகிறோம்.
செமிகண்டக்டா்கள் கிடைப்பதில் சிக்கல், அதிக உற்பத்தி செலவு, உதிரிபாகங்ககளைக் கொண்டு செல்வதற்கான கன்டெய்னா்களுக்குத் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்னைகள் தணிந்தது நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் வாகன உதிரிபாக உற்பத்தித் துறை வளா்ச்சிக்கு உதவியது என்றாா் அவா்.
சங்கத்தின் பொது இயக்குநா் வின்னி மேத்தா கூறுகையில், ‘நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் வாகன உதிரிபாக உற்பத்தியாளா்களுக்குக் கிடைத்த வருவாயில் 47 சதவீதம் (2,860 கோடி டாலா்) காா் உற்பத்தியாளா்களுக்கு அசல் உதிரிபாகங்களை அனுப்பியதன் மூலம் கிடைத்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது வெறும் 38 சதவிகிதமாக இருந்தது. எஸ்யுவி-க்களுக்கான தேவை அதிகரித்ததால், உதிரிபாகங்களின் மதிப்பு விகிதமும் அதிகரித்தது.
எனினும், இரு சக்கர வாகனத் துறை பின்னடைவைச் சந்தித்ததால் கடந்த நிதியாண்டின் முதல் பாதியில் அந்தத் துறையிடமிருந்து வாகன உதிரிபாகத் துறைக்குக் கிடைத்த வருவாய் 21 சதவீதமாக இருந்த நிலையில், அது நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 18 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றாா் அவா்.