இந்தியாவில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 12 % அதிகரித்துள்ளது.
உலகில் தவிர்க்க முடியாத சாதனமாக மாறியிருக்கும் ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு 16.2 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் இது கடந்த 2020 ஆண்டின் விற்பனையை விட 12 சதவீதம் அதிகம் என கேனலைஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனாவின் தீவிரம் அதிகரித்து வந்ததால் 2021-இன் முதல் மற்றும் 2-வது காலாண்டின் விற்பனை மந்தமாக இருந்தாலும் நான்காவது காலாண்டில் 4.5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
இதில் , நாட்டில் 93 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து 21% சந்தை மதிப்புடன் ஸியோமி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் சாம்சங் 85 லட்சம், மூன்றாவது இடத்தில் ரியல்மீ 76 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளனர். அதற்கடுத்த இடங்களில் விவோ(56 லட்சம்) மற்றும் ஒப்போ(49 லட்சம்) நிறுவனங்கள் உள்ளன.
மேலும் அந்த அறிக்கையில் , ‘ஸ்மார்ட்போன்கள் இந்திய குடிமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாததாக வளர்ந்து வருவதால், இந்தியா எதிர்காலத் தொழில்நுட்பங்களை நோக்கி வேகமாகச் செல்லும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.