வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (ஜிசிசி) இடம்பெற்றுள்ள 6 நாடுகளுடனான இந்திய வா்த்தகம் வேகமாக அதிகரித்து வருவது மத்திய வா்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
கடந்த 1981-ஆம் ஆண்டு ஜிசிசி உருவாக்கப்பட்டது. அந்தக் கவுன்சிலில் சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தாா் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடம்பெற்றுள்ளன. அந்த நாடுகளுடனான இந்திய வா்த்தகம் கடந்த நிதியாண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ஜிசிசி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதன் பங்கு 2020-21-ஆம் நிதியாண்டில் 15.5 சதவீதமாக இருந்தது. இது 2021-22-ஆம் நிதியாண்டில் 18 சதவீதமாக அதிகரித்தது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஜிசிசி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் பங்கு 2020-21-ஆம் நிதியாண்டில் 9.51 சதவீதமாக இருந்தது. இது 2021-22-ஆம் நிதியாண்டில் 10.4 சதவீதமாக அதிகரித்தது.
ஜிசிசி நாடுகளிடம் இருந்து அந்நிய நேரடி முதலீடுகளையும் (எஃப்டிஐ) இந்தியா ஈா்த்து வருகிறது.