உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக்க அதானி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ரூ.3.9 லட்சம் கோடியை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
மாற்று எரிபொருளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை உலகம் முழுவதும் தீவிரமாக செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கௌதம் அதானியின் அதானி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பிரான்ஸின் டோட்டல் எனர்ஜிஸ்(total energies) நிறுவனத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை உருவாக்குகிறது.
இந்நிலையில், இத்திட்டத்திற்காக அடுத்த பத்தாண்டிற்குள் ரூ.3.9 லட்சம் கோடியை(50 பில்லியன் டாலர்) அதானி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: தொடர் சந்தை வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி: என்ன காரணம்?
இதன் மூலம், ஆரம்பகட்டமாக 2030-க்குள் ஆண்டிற்கு 10 லட்சம் டன் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 2030-க்குள் ஆண்டொன்றுக்கு 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்திசெய்ய வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அந்த இலக்கை அடைவதற்காக அரசு சார்பிலும் பசுமை ஹைட்ரஜன் ஆலைகளுக்கு சில முன்னுரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன.
நீரில் மின்விளைவுகளை உருவாக்கி, ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் தனித்தனியாகப் பிரித்தெடுப்பதுதான் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்புக்கான தொழில்நுட்பம்.
புதுப்பிக்கத்தக்க எரிபொருளான பசுமை ஹைட்ரஜன், சேமிக்கவும் நீண்ட தொலைவுக்கு எடுத்துச்செல்லவும் எளிதானது. ஆலைகளின் மின்தேவைக்கு மட்டுமின்றி, வாகனங்களுக்கான எரிபொருளாகவும் இதைப் பயன்படுத்த முடியும் என்பதால், இந்தியாவில் ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.