

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையிலும் களமிறங்கியுள்ள அதானி குழுமத்திற்கு அதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலத்தில் பங்கேற்றன. சுமாா் 40 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றையானது நிறுவனங்களுக்கு ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
அதில் தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது. 5ஜி தொழில்நுட்பத்துக்கு முக்கியமாகக் கருதப்படும் 700 மெகா ஹொ்ட்ஸ் அதிா்வெண் கொண்ட அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.
பாா்தி ஏா்டெல் நிறுவனமானது ரூ.43,084 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது. வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18,784 கோடிக்கும் அதானி நிறுவனமானது 26 ஜிகா ஹொ்ட்ஸ் அதிா்வெண் கொண்ட அலைக்கற்றை உள்ளிட்டவற்றை ரூ.212 கோடிக்கு வாங்கியது. 26 ஜிகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றையைப் பொது சேவையில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏலம் விடப்பட்ட மொத்த அலைக்கற்றையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே அதானி குழுமம் ஏலத்தில் எடுத்தது.
மேலும், தொலைத்தொடர்பு சேவையில் இல்லாத அதானி நிறுவனம் 5ஜி ஏலத்தில் பங்கேற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தற்போது அதானி குழுமம் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை துவங்க அதற்கான உரிமத்தை மத்திய அரசு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் 2-வது பெரிய பணக்காரராக இருக்கும் அதானியின் இந்த தொலைத்தொடர்பு வருகை ஜியோ, ஏர்டெல் நிறுவங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.