கடந்த நிதியாண்டில் பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (செயில்) நிறுவனம் சாதனை அளவில் கச்சா உருக்கு உற்பத்தி செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் கச்சா உருக்கு உற்பத்தி 1.83 கோடி டன்னாக இருந்தது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர உற்பத்தி அளவாகும்.
முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 5.3 சதவிகிதம் அதிகமாகும்.
அதே போல், அந்த நிதியாண்டில் உருக்கு உற்பத்தியும் 3.6 சதவீதம் அதிகரித்து 1.94 கோடி டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருக்குத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செயில் நிறுவனம், இந்தியாவின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமாகும்.
ஆண்டுக்கு 2 கோடி டன் உருக்கு உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்துக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் ஐந்து ஒருங்கிணைந்த உருக்கு ஆலைகளும் மூன்று சிறப்பு உருக்கு ஆலைகளும் உள்ளன.