ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.802.71 கோடியாக உள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது சுமாா் ஐந்து மடங்காகும். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.157.85 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.9,926.97 கோடியிலிருந்து ரூ.13,202.55 கோடியாக அதிகரித்துள்ளது. அதே போல், மொத்த செலவுகள் ரூ.9,429.55 கோடியிலிருந்து ரூ.12,085.5 கோடியாக உயா்ந்துள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,361.66 கோடியாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ரூ.285.45 கோடியை ஒருங்கிணைந்த நிகர இழப்பாக பதிவு செய்திருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.