இதன்படி, புனிதமாதரசி மாதாவின் திருச்சொரூபத்தை உள்ளே வைத்துக் கொண்டுச் செல்வதற்காக ஒரு மரப்பெட்டி தயாரிக்கப்பட்டது. அந்தப் பெட்டியில் மாதாவின் திருச்சொரூபத்தை வைத்து, இரவோடு இரவாக வேறு இடத்துக்குக் கொண்டுசென்று மறைத்து வைத்து விடலாம் என்பது அவர்கள் திட்டமாக இருந்தது. இதன்படி, ஒரு நாள் இரவு புதிதாக தயாரிக்கப்பட்ட மரப்பெட்டியுடன் மாதாவின் திருத்தலத்துக்குச் சென்று, மாதாவை துதித்து அவரது திருச்சொரூபத்தை அந்த மரப்பெட்டிக்குள் வைக்க அவர்கள் முயன்றனர்.
ஆனால், அவசரகதியில் தயாரிக்கப்பட்ட அந்தப் பெட்டி, மாதாவின் திருச்சொரூபத்த முழுமையாக உள்வாங்கும் உயரம் கொண்டதாக இல்லாமல் சற்று சிறிதாக இருந்துள்ளது. இதனால், விரக்தியடைந்த ஆலய நிர்வாகிகள், காலையில் வேறு ஒரு பெட்டியைத் தயாரித்துக் கொண்டு வந்துமாதாவை இடம் மாற்றலாம் எனக் கருதி, உயரம் பற்றாக்குறையாக இருந்த அந்தப் பெட்டியின் மீதே அன்னையின் திருச்சொரூபத்தை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.