பாகுபலி வசன சர்ச்சை: நீதிமன்றம் புதிய உத்தரவு

ஆட்சேபகரமான வசனத்தை நீக்காவிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்
பாகுபலி வசன சர்ச்சை: நீதிமன்றம் புதிய உத்தரவு
Updated on
1 min read

பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான வசனத்தை நீக்காவிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பாகுபலி படத்தில் பகடை என புனைப்பெயரில் அழைக்கப்படும் அருந்ததியர் சமுதாயம் குறித்து அவதூறாக வசனங்கள் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதனால் திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன. பாகுபலி படத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது.

‘என் தாயையும் தாய்நாட்டையும் எந்தப் பகடைக்குப் பிறந்தவனும் தொட முடியாது.. என்று வரும் வசனத்தில், ‘பகடைக்குப் பிறந்தவன்’ என்ற வாக்கியத்தை தாயக்கட்டையால் ஆடப்படும் சூதாட்டத்தின் தோல்விக்குப் பிறந்தவன் என்ற பொருளில்தான் எழுதியிருந்தேன்.  அது ஒரு சமூகத்தின் பெயர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஒரு சமூகம் புண்படுவதற்குக் காரணமான அந்தச் சொல்லைப் படத்தில் இருந்து நீக்கிவிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் அந்தச் சொல் நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதில் யார் மனமேனும் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வசனம் எழுதிய மதன் கார்க்கி அறிக்கை வெளியிட்டார்.

பாகுபலி படத்தில் சர்ச்சைக்குரிய வரிகள் உள்ளன. இந்த வசனம் அருந்ததியர்களின் மனதை மிகவும் புண்படுத்துகிறது. எனவே, வசனகர்த்தா மதன்கார்க்கி, திரைப்பட இயக்குநர் ராஜமௌலி, தயாரிப் பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிய வேண்டும். பகடை எனும் சொல்லை நீக்கி உத்தரவிட வேண்டும் என தமிழக ஆதித்தமிழர் கட்சி அமைப்பு செயலர் சு.க.சங்கர், ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.ஜக்கையன், தமிழ்ப் புலிகள் அமைப்பு பொதுச் செயலர் பேரறிவாளன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்கள்.

இதனையடுத்து, ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற ஆட்சேபகரமான வசனத்தை நீக்குமாறு படத்தின் இயக்குநருக்கு உத்தரவிட்டிருப்பதாக மத்திய தணிக்கை வாரியம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் தரப்பில், வசனம் நீக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டது.

இது தொடர்பான மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மத்திய தணிக்கை வாரியம் தனது கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பவேண்டும்; ஆட்சேபகரமான வசனத்தை நீக்குமாறு திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும், வசனத்தை நீக்காவிட்டால், திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. விசாரணை நாளைக்கு (ஆகஸ்ட் 19) ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com