ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திரைப்பட இயக்குநரான மஜீத் மஜீதியின் ‘பியாண்ட் தி கிளொவ்ட்ஸ்’ திரைப்படம் இந்தி உட்பட ஆங்கிலம் மற்றும் தமிழிலும் உருவாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் எதார்த்தங்களைப் படமாக்கி ஆஸ்கார் விருதைப் பெற்றவரான இவருடைய முதல் இந்தி படம் இதுவாகும்.
ஷாயித் கபூரின் சகோதரரான இஷான் காட்டர் மற்றும் மாளவிக்கா மோகனன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துவரும் இந்தப் படத்தை ஜி ஸ்டுடியோ மற்றும் ஐகாண்டி ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படமானது வருங்காலத்தில் பன்மொழியில் தயாராகும் இந்திய படங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
3 மொழியில் தயாராகும் இந்தப் படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டோ அல்லது ஒரே நேரத்தில் தனி தனியோ உருவாகப் போவதோ இல்லை, 3 மொழிகளும் கொண்ட ஒரே படமாக இது உருவாகி வருகிறது. இதைப்பற்றி இயக்குநர் மஜீத் கூறுகையில், “மூன்று மொழிகளும் சிறிது அளவு மட்டும் ஆங்காங்கே படத்தில் வரப்போவதில்லை, மூன்று மொழிகளுக்கும் படத்தில் முக்கிய பங்குண்டு, மேலும் அந்த அந்த மொழிகளில் நல்ல ஆளுமை உடையவர்களை வைத்தே படத்தை உருவாக்கவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இயக்குநர் மஜீத் அவர்கள் ‘ச்சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ என்ற படத்திற்காக ஆஸ்கார் விருதை வாங்கியவர், மேலும் ‘தி கலர் அஃப் பாரடைஸ்’ மற்றும் ‘பரான்’ ஆகிய படங்கள் இவருடைய தலைசிறந்த படங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவை.
இந்தப் படம் அண்ணன் தங்கை உறவை மையமாகக் கொண்டு அவர்களைச் சுற்றி நடக்கும் வாழ்க்கை எதார்த்தங்களை மிக அழுத்தமாகப் பதிவு செய்யும் வகையில் இருக்கும் எனக் கருதப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்து வருகிறார்.