

நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல ஹிந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து வந்துகொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது.
இந்தப் படம் விஜய்யின் ஜனநாயகனுக்குப் போட்டிக்காகக் களமிறக்கப்படவுள்ளதாலும், தேசிய விருது பெற்ற பெண் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் அதர்வா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளதாலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மும்பையில் உள்ள பிரபல ஹிந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வருகை தந்த விடியோ தற்போது இணையத்தில் பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மாவீரன், அமரன், மதராஸி என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் சிவகார்த்திகேயன் வணிக ரீதியிலும் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
'பத்மாவதி', 'ஹீரமண்டி' மற்றும் தேசிய விருது வென்ற 'கங்குபாய் கதியவாடி' உள்ளிட்ட பிரமாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலாவுடன் இணைந்து அவர் பான் இந்தியா நட்சத்திரமாக உயருவாரா? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இருவரது சந்திப்பு குறித்து இதுவரை இருதரப்பிலிருந்தும் எந்தவிதமாக அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில், இருவரும் இணைந்து பணியாற்றுவார்களா? என ரசிகர்கள் ஆரவாரமாகவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.