

சூரஜ் இயக்கத்தில் விஷால். தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ள படம் - கத்தி சண்டை. வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிப்பதை முன்னிட்டு, இப்படத்தின் டீசர், டிரெய்லர்களில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வடிவேலு கூறியதாவது:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருப்பதாகச் சொன்னார்கள். உண்மையில் எனக்கு கேப்பே கிடையாது. இந்த வடிவேலு எப்போதும் டாப்புதான். அதற்கு காரணம் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவுதான். ஊடகங்களில் நான் தான் கார்ட்டூன் பொம்மையாக வருகிறேன். என்னை வைத்துதான் காமெடி பண்ணுகிறார்கள். இதற்கு என்னுடைய உழைப்புதான் காரணம். எந்நேரமும் நான் சினிமாவைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
கதை சரியில்லாமல்தான் இத்தனை காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தேன். மற்றபடி வாய்ப்பில்லாமல் வீட்டில் உட்காரவில்லை. நிறைய கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படிக் கேட்ட கதைகளில் இயக்குநர் சுராஜ் சொன்ன கத்தி சண்டை கதை எனக்குப் பிடித்தது. என்னுடைய கதாபாத்திரத்தைக் கேட்டவுடன், டுபாக்கூர் மருத்துவரா என்று கேட்டேன். டுபாக்கூர் மாதிரியே இருக்கும். ஆனால் டுபாக்கூர் மருத்துவர் கிடையாது என்று சுராஜ் பதிலளித்தார். இந்தப் படத்தைச் சிரித்துக்கொண்டே பார்ப்பீர்கள். அந்தளவுக்குத் திறமையாக இயக்கியுள்ளார்.
எல்லோரும் என்னை லெஜண்ட் என்கிறார்கள். உண்மையில் எனக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் கூடத் தெரியாது. என்னுடைய பலம் எனக்குத் தெரியாது. யானைக்கு அதன் பலம் தெரிந்துவிட்டால் அது வேறு மாதிரி ஆகிவிடும். திமிரு, நடிகர் சங்கத் தேர்தல், இந்தப் படம் என விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளேன். விஷாலின் நல்ல மனதால் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.